மாந்தராயிரு! மந்தையாயில்லாமல்!!

ஏன்?
எதற்கு?
எப்படி?

போன்ற வினாக்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை நம் அனைவரது மனங்களிலும், அனைத்து விடயங்களுக்கும் ஏற்பட்டால் தான் நாம் மனிதராக பிறந்ததற்கு அர்த்தம் இருக்க முடியும்.

ஒன்றன் பின் ஒன்றாக மந்தைகள் தான் செல்லும். சில வேளைகளில் அவை கூட தங்கள் சொந்த அறிவை பயன்படுத்துகின்றன, சிந்திக்கின்றன என்பதுவும் நாம் அறிந்ததே.

ஆனால் சில வேளைகளில் பெற்றோர்களும், பெரியவர்களும் குழந்தைகள் ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கும் பருவம் வருவதற்கு முன்னரே பல மூடநம்பிக்கைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள்.

இதிலே வேதனை என்னவென்றால், இத்தனை வயதாகியும் அவர்களுக்கே அவர்கள் திணிக்கும் விடயத்திற்கு காரணம் தெரிந்திருப்பதில்லை. அதை அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கவுமில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இவ்வலைப்பூவின் வழி நான் யாரையும் புண்படுத்தவோ, அல்லது குறைகூறவோ விளையவில்லை என்பதை முன்கூட்டியே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அனைத்து விடயமும் ஆராயப்பட வேண்டியவையே.

அதை விடுத்து இது இப்படித்தான் என்று முரண்டு பிடிக்கும் தன்மைக்கு எதி்ர்மாறாகத்தான் நான் இங்கு சிந்திக்க விளைகின்றேன்.

இவ் "மெய்பொருள் காண்பதறிவு" என்ற சிந்தனைக்கு பக்கபலமாக உள்ள அனைவரையும் இவ்வலைப்பூவுடன் அரவணைத்துச் செல்ல விரும்புகின்றேன்.

("மெய்ப்பொருள்" என்பதற்கே வேறு அர்த்தம் கற்பிப்போரும் உள்ளனர், அது பற்றிப் பின்னர் பார்ப்போம்)

மதம்

மதம் ஓரு மைல் கல்

உண்மை தான்

முன்னேற விடுவதில்லை

பின்னோக்கித் தள்ளுகிறது.

சகுனம்!

பகுத்திடும் அறிவைப் பாழடித்து
படித்த அறிவை மறந்துவிட்டு
மிகுதியாய் புதுமை பேசிடுவோர்
மின்மினிப் பூச்சி ஒளிபோன்றோர்
வகுத்து வாழ்வை வாழ்ந்திடுவோர்
வழுக்கி விழுந்த கதையில்லை
மிகுத்து பேதமைச் சேற்றினிலே
மிதக்கும் மனிதர் பதராவார்!

பில்லி சூனியம் எனச்சொல்லி
பிஞ்சு மனத்தைக் கெடுக்கின்றார்
செல்லாக் காசின் நிலைபோல
செல்லப் பிள்ளை வளர்கின்றான்
எல்லாம் இறைவன் செயலென்னும்
எண்ணம் முயற்சியைத் தடுக்கிறது
பொல்லா சகுனச் சேற்றினிலே
புகுந்து அறிவும் அழிகிறது

பல்லி கொட்டி துணையழைக்கும்
பக்தியில் இவனும் சகுனமென்பான்
பல்லி பூரான் எலிகண்டு
பாயும் பூனை குறுக்கிட்டால்
நல்ல காரியம் தடைபடுமாம்
நடக்கப் பயந்து திரும்புகிறான்
எல்லா சகுனம் பார்த்துத்தான்
இப்படி வீழ்ந்தான் என் தமிழன்!

காட்டுத் தனமாய் வாழ்கின்றான்
கற்றறி வாளர் சொல்வதையும்
கேட்டும் கேளா திருக்கின்றான்
கீழே விழுந்து கிடக்கின்றான்
நாட்டில் வாழும் படித்தவன்தான்
நல்லறி வின்றி கெடுக்கின்றான்
ஏட்டிலே இருப்பது வேதமென
எதையும் ஆய்ந்திட அஞ்சுகின்றான்!

அறிவியல் உளவியல் கற்பவனும்
அண்டம் கோள்நிலை படிப்பவனும்
அறிவியல் அறிவைப் பெறவில்லை
அதன்திறன் அறியும் மனமில்லை
நெறிகள் வகுக்கா காலத்தில்
நெடிதாய் படைத்த கற்பனையை
நெறிகள் வேதம் என்றெண்ணி
நெஞ்சில் இருத்தி அஞ்சுகிறான்!

மெய்ப்பொருள் - ஆரம்பம்.

"மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற விடயத்தில் நான் சிறு வயது முதலே மிகவும் ஆர்வமாக இருந்து வந்தேன். இருந்ததனால் பல சிக்கல்களையும் அவ்வப்போது எதிர்நோக்கியுள்ளேன். அறிவியலைப் புகட்ட வேண்டிய ஆசிரியர் கூட என்னால் முன்வைக்கப்பட்ட சில இடக்கு மடக்கான கேள்விகளுக்கு அவரது கோபத்தை பதிலாக காட்டியதும் உண்டு.

இந்த விடயத்தில் எனக்கு சிறு வயது முதலே ஊக்கமும், உந்துதலும் கொடுத்தது என் தந்தையே!

சிறு வயதில் வீட்டில் உள்ள அனைத்து மின்னியல், இலத்திரனியல், மற்றும் ஏனைய உபகரணங்களை பாகம் பாகமாக்கி மீள அமைப்பதில் எனக்கு அலாதி ஆர்வம். இவ் முயற்சிக்கு குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து கண்டனங்கள் கிளம்பிய போதும், அவ்விடயத்திலும் தொடர்ந்தும் ஊக்கமளித்து ஆதரவு தந்ததும் என் தந்தையே.

பின்னர் இது பல வழிகளில் எனக்கு உதவியது.

மெய்ப்பொருள் காண்பதறிவு என்று ஆரம்பித்து விட்டு நான் எங்கேயோ போய் விட்டேன்.

கண்ணை மூடிக்கொண்டு சொல்வதெல்லாவற்றையும் நம்புவது என்பது உண்மையிலேயே மூடத்தனம் தான். சில பெரியவர்கள், ஏன் ஆசிரியர்கள் கூட சில சமயம் சில விடயங்களுக்கு சரியான விளக்கம் கொடுப்பதில்லை. அப்படியென்றால் அப்படித்தான் என்று விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். (அவர்களிற்கும் தெரியாதோ என்னவோ!!)

மூடத்தனத்திற்கு எதிராக, உண்மையிலேயே எம்தமிழர் அனைவரும் மெய்ப்பொருள் அறிய முற்படுவாராயின், எம்மினம் சிறந்து செழித்தோங்கும் என்ற எண்ணத்தில் இவ் வலைப்பூவினை ஆரம்பிக்கிறேன்.